களனி கங்கையின் பெருக்கெடுப்பால், கொழும்பின் தொட்டலங்க, சேதவத்தை, மட்டக்குளியின் சில பகுதிகள் தொடர்ந்தும் வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில் அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்தும் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்கள், உடை மற்றும் குழந்தைகளுக்கான பால்மா, சிறுவர் உணவுகளுக்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசங்களை, களனி ஆற்றிலிருந்து பெருக்கெடுக்கும் வெள்ள நீர் நேற்று சுமார் மூன்றரை அடிக்கு மேல் மூழ்கடித்திருந்த நிலையில் அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பாடசாலைகள் மற்றும் உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ச்சியாக சமைத்த உணவும், சிலருக்கு சமைப்பதற்கான அரிசி உள்ளிட்ட பொருட்களும் தடையின்றி பலராலும் வழங்கப்பட்டு வருகிறன.
எனினும் அந்த மக்களின் உடைகள் அனைத்தும் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் மாற்று உடைக்காக மக்கள் காத்திருப்பதுடன், நூர்றுக்கணக்கான கைக் குழந்தைகளுக்கு தேவையான பால் மாவினை பெற்றுக்கொள்வதிலும் பாதிக்கப்பட்டோர் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
தொட்டலங்க பகுதியில் வெள்ள்த்தால் வீடுகளை இழந்துள்ள மக்கள், இலங்கை – ஜப்பான் நட்புறவு பாலத்தின் அருகே முகாமிட்டு தங்கியுள்ளனர். பலர் தமது வீடுகளின் மேல் மாடிகளிலும், சிலர் உறவினர், அயலவர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
குறிப்பாக வெள்ள நீரில் மூழ்கியுள்ள வீடுகள் பலவற்றில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடும் மக்கள் அதனால் வீடுகளை விட்டு வெளியேறுவது குறித்து பலமுறை சிந்திப்பதாக கூறுகின்றனர். இதனால் பலர் வெள்ள நீருக்கு மத்தியிலும் தமது குடியிருப்புக்களிலேயே முடங்கிக்கிடக்கின்றனர்.
எவ்வாறாயினும் பல பகுதிகளிலிருந்து உணவினைக் கொண்டு வரும் நிவாரண பணியாளர்கள் அவற்றை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டோருக்கு வழங்கி வருகின்றனர்.
எனினும் நிவாரணப் பணியாளர்கள் மற்றும் தனவந்தர்களிடம் குழந்தைகளுக்கான பால்மா, மாற்று உடை, மருந்து மற்றும் பம்பஸ் உள்ளிட்டவற்றை பெற்றுத் தருமாறு பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
அத்துடன் பிரதேசத்தின் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து கல்வி உபகரணங்களும் வெள்ளத்தால் அழிவடைந்துள்ள நிலையில் அவற்றுக்கும் உதவி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.